கருத்துகள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன என்பதைப்பற்றி நேற்றைக்கு நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன். சில நண்பர்களிடமும் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சிறுதுளி பெரு வெள்ளம் கோட்பாடுதான். நேற்றைக்கு நடந்த ஒரு நிகழ்வில் அதை மிக மிக லேசாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல அது ஓரிரு நிமிடங்களில் நடந்து முடிந்துபோயிற்று. அந்த நிகழ்வு என்னைக் கொஞ்சம் (கொஞ்சமா?) உசுப்பி விட்டது. இந்தச் சுழற்சிக்குள் திருப்பவும் கொண்டு வந்து விட்டது. தாமரையிலையில் தண்ணீர் போல இருக்க முயற்சித்தாலும் எத்தனை நாளைக்கு? ம்ம்ம்…
இந்தக் கருத்துக்கட்டமைப்புகளுக்கு எதிராக நாமும் சிறுதுளி பெருவெள்ளம் கணக்கில் வயலுக்கு பாத்தி மாற்றி மாற்றி நீர் பாய்ச்சுவதைப்போல செய்துகொண்டேயிருக்க வேண்டியதுதான். ஆனால், என்ன இப்படி நாம் செய்துகொண்டிருப்பதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கக்கூடாது. ம்ம்ம்… ஒரு பெரிய மக்கள்கூட்டமே இந்த பாத்திகளில், எந்தப்பக்கம் சிறுதுளி பெருவெள்ளமாகத் திருப்பப்படுகிறார்களோ அதன்வழிச் சென்று கொண்டிருக்கிறார்கள், தாங்கள் அப்படி அவர்களறியாமலேயே செலுத்தப்படுகிறார்கள் என்பதறியாமலேயே.. புதிரான விடயந்தான்.
இன்றைக்கு இரண்டு விடயங்களை அவதானித்தேன். பா.ராகவனின் சென்னைப் புத்தகக் கண்காட்சித் தொகுப்பு இடுகைகள். மொத்தமாகப் படித்ததாலோ என்னவோ பல விதயங்கள் பளிச் புளிச்சென்று தெரிந்தது. இடதுசாரி பதிப்பகங்கள் குறித்த அவரது பார்வை. கடனட்டை தேய்ப்பது குறித்தது என்ற மேலோட்டமான கருத்து என்று நினைத்துப்போகலாம். ஆனால், அது மட்டுமா என்று நம்மை நாமே கொஞ்சம் கேள்வி கேட்கலாம்.
இரண்டாவது: சந்தனமுல்லை கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருந்த ஒரு கட்டுரையில் இருந்த இரண்டு தொடுப்புகளைப் பின்ந்தொடர்ந்து போனேன்.
முதலாவது ‘மருதையப்பாட்டா‘ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியிருக்கும் இடுகை. படித்த கையோடு வினவு தளத்திற்குப் பாய்ந்து அந்த இடுகையையும் கொஞ்சம் நேரமெடுத்துக்கொண்டு படித்து முடித்தேன். ‘பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்’ என்ற இந்த இடுகையைக் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு படியுங்கள் நண்பர்களே!
தலையைச் சொறிந்துகொண்டே ஜெயமோகனின் மருதையப்பாட்டா இடுகையை இன்னா காரம். இன்னா அகங்காரம் என்றபடி வாசித்தேன்.
//ஓவியர் மருதுவின் ஓவியத்தை இரசிப்பதற்கு வரலாறு படித்திருக்க வேண்டும்!//
//நடுத்தர வர்க்கத்தின் காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!//
//நாட்டுப்பற்றும், துரோகமும் வரலாற்றறிவு இன்றி புரியாது!//
//தொலைக்காட்சி உருவாக்கும் ஊனமுற்ற டிஜிட்டல் மூளை! //
//உடலுழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பும் குறைவதால் வரும் விளைவுகள்!//
//காட்சி பார்த்து கருத்து வராது, குழந்தைகளான பெரியவர்கள்!//
//உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!//
//முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!//
//நோக்கமற்ற இன்பவாதப் படிப்பினால் பலனில்லை!//
//படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!//
//கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!//
//படிக்காத வரை அடிமைத்தனம், படிக்கும் போது விடுதலை!//
மருதையனின் உரையின் பிரதியில் இருந்து பெரிய எழுத்துகளில் இருப்பதை மட்டும் எடுத்து இங்கே இட்டிருக்கிறேன். எகத்தாளமாகச் சொல்வதற்கு இதில் என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்கள்.
எனக்கேயான குறிப்பு:
நானும் என்னுடைய நண்பர் காலம் செல்வத்திடம் ஒன்று கேட்கவேண்டும். அவ்வப்போது கேட்பதுதான். இம்முறை இந்த இரண்டு சுட்டிகளையும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன். படித்தாரா என்று கேட்டுவிட்டு, அவர் கட்டிக்கொண்டு அழும் ஜெயமோகனின் எண்ணங்களைப் பற்றி காலம் செல்வம் என்ன நினைக்கிறார் என்று கேட்கவேண்டும். எழுத்து பிடித்திருக்கிறது. சிறுகதை பிடித்திருக்கிறது எல்லாம் சரி. சமீபத்தில் நான் கூட சந்தித்த ஒரு மலையாள கதகளி நாட்டியம் ஆடுபவரிடம் ஜெயமோகனின் சிறுகதையை சிலாகித்தேன். ஒரு சில எழுத்து பிடித்திருப்பது வேறு. அதற்காக அந்த மனிதரையே கட்டிக்கொண்டு அழுவது வேறு என்று சொல்லவேண்டும்.
இந்த லட்சணத்தில் ஆனந்த விகடனின் கமல்ஹாசன் வேறு ஜெமோ புராணம். அதான் சொன்னேனே கருத்துக் கட்டமைப்புகள் என்று..
